( NJS ) தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேசிய விருது வாங்கியபின்பு தான் திருமணம் என நயன்தாரா உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது . இந்நிலையில் அதற்கான கதைகளோடு பலரும் அவரின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கத் தொடங்கி விட்டதாக சொல்லப்படுகிறது
நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். அவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார்.
அது தவிர ரஜினியுடன் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார்.
நயன்தாராவுக்கு முன்பே அறம் படத்துக்காக தேசிய விருது கிடைக்க வேண்டியது. பல்வேறு பாராட்டுகளும் விருதுகளும் குவிந்தாலும் அவருக்கு இன்னும் தேசிய விருது மட்டும் கிடைக்கவில்லை.
நயன்தாரா தேசிய விருது வாங்குவாரா ...?
பொறுத்திருந்து பார்க்கலாம்.
( NJS ) நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் ‘பூமி' என்ற திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ள இந்தப்படம் ரவியின் சினிமா வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க வகையில் அவரது 25வது படமாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் படம் வெளியிட திட்டமிடப்பட்டு, படத்தின் அதிகாரப்பூர்வ டீஸர் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது, அதற்கு பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பும் கிடைத்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக, படம் தாமதமாகிவிட்டது.
‘பூமி' படத்தை லக்ஷ்மன் இயக்கியுள்ளார். மேலும் இந்த படம் இயக்குநருக்கு ஜெயம் ரவியுடன் மூன்றாவது படமாகும். முன்னதாக இருவரும் இணைந்து ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் ஆகிய பிளாக்பஸ்டர் திரைப்படங்களைக் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் ‘பூமி' திரைப்படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
வேளாண்மையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் படம் படமாக்கப்பட்டு வருகிறது, மேலும் இப்படத்தில் நாசா விஞ்ஞானியாக ஜெயம் ரவி நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இமான் இசையில் உருவாகி உள்ள இந்த படத்தில் இருந்து, அனிரூத் குரலில் "தமிழன் என்று சொல்லடா" என்ற பாடல் ஜெயம் ரவி பிறந்தநாள் அன்று வெளியிடப்படுவதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என பல முகங்களை கொண்டவர் சின்னி ஜெய்ந்த். 1980 மற்றும் 90களில் நகைச்சுவை நடிகராக கலக்கியவர், இப்போது தனது மகனால் பெருமையடைந்துள்ளார்.
நடிகர் சின்னி ஜெயந்த்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன், சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக 2019-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 4ம் தேதி அதாவது நேற்று வெளியானது. இந்த தேர்வில் ஸ்ருதன் அகில இந்திய அளவில் 75-வது இடத்தைப் பெற்றுள்ளார். இதையடுத்து திரைத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஸ்ருதனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
IAS தேர்வில் வெற்றி பெற்ற நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு சொல்ல விரும்புவது...
முதலில் விரும்பிப் படிக்க வேண்டும். கடின உழைப்புடன் தொடர் முயற்சியும் பொறுமையும் முக்கியம். நம் ஆசிரியர்கள், வழிகாட்டிகள் சொல்வதை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். குறிக்கோளோடு கூடிய பயிற்சி அவசியம். அதைத் தொடர்ச்சியாக மேற்கொண்டாலே போதும். வெற்றி கிடைத்துவிடும். இதுதான் எனக்கு நடந்தது. மற்றவர்களுக்கும் நடக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், கதாசிரியர் என அனைத்துத் துறைகளிலும் தனது திறமையை நிரூபித்து தமிழ்த் திரையுலகில் முன்னணியில் இருக்கும் தனுஷ் , கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜூலை 28ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். 'மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு நாயகியாக நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது ட்விட்டரில் அவருக்கு வாழ்த்துக் கூறி பதிவிட்டு இருந்தார். அதே நேரம் அவருடன் ஜோடியாக நடிக்க ஆவலாக காத்துக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
மாளவிகா மோகனன் பதிவிட்டு இருந்த ட்வீட்டுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனுஷ்பதிலளித்திருந்தார். அதில் நானும் உங்களுடன் பணியாற்ற ஆவலுடன் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மாளவிகா மோகனன் ட்வீட் பதிவிட்ட சில நாட்களே ஆகும் நிலையில் தற்போது தனுஷின் அடுத்த படமான D 43 படத்தில் ஹீரோயினாக நடிக்க அவர் ஒப்பந்தமாகி இருக்கிறார் என செய்தி பரவி வருகிறது. இந்த படத்தினை கார்த்திக் நரேன் தான் இயக்கவுள்ளார்.
மாளவிகா மோகனன் இதுவரை 2 தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தளபதி விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்தில் அவர் நடித்துள்ளார்.
தனுஷ் உடன் மாளவிகா ஜோடி சேர்வதாக கூறப்படும் D 43 படத்தினை துருவங்கள் 16, மாஃபியா பட புகழ் கார்த்திக் நரேன் இயக்க உள்ளார்.
(NJS ) சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து இயக்குனர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது :
“பேரிடர் காலங்களைக் கையாளும் தமிழக அரசுக்கு…
நேரம் காலம் பாராமல் தன்னுயிர் பற்றி கவலைப்படாமல் சிறப்பான பணியை முன்வைக்கும் முதல்வர் மற்றும் அதிகாரிகளை நன்றியோடு பார்க்கும் அதே வேளையில், இவ்வரசுக்கு அவப்பெயர் உருவாக்கும் ஈன காரியங்களை சில அதிகாரிகள் தங்கள் வரம்பு மீறி செய்து விடுகிறார்கள்.
காத்துநிற்கும் காவல் அதிகாரிகள் மத்தியில் அப்பாவி மக்களை வேட்டையாடும் சில ஓநாய்களும் கலந்துவிடுவது ஒட்டுமொத்த காவல்துறையையே பழிச்சொல்லிற்கு ஆளாக்கிவிடுகிறது.
விரும்பத்தகாமல் நடந்துவிடும் சில சம்பவங்களை, சமூகப் பொறுப்புடன் சுட்டிக்காட்ட நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். குற்றமற்றவர்களைத் தண்டிப்பதே தவறு என்ற ஜனநாயக கட்டமைப்பில் வாழும் நாம், எப்படி இரு உயிர்கள் வதைபட்டு அவதிக்குள்ளாகி மரணிக்க அனுமதித்துவிட்டோம் என்று புரியவில்லை.
அந்த உயிர்களின் வலியும் வேதனையும் நம் வீட்டில் உள்ளவர்களுக்கு நேர்ந்தால் எப்படி துடித்துப் போவேனோ அப்படி துடித்துப் போகிறேன். அவர்களும் நம்ம வீட்டுப் பிள்ளைகள் தானே?
என்ன அவன் சாத்தான் குளத்திலிருக்கிறான். நான் சென்னையில் இருக்கிறேன். ஆனால் அந்த இறப்பின் வலி, வேதனை ஏன் என்னை உறங்கவிடாமல் செய்து கொண்டிருக்கிறது? அதிகாரம் ஒருபோதும் அப்பாவிகளின் உயிரெடுக்க துணைபோகக்கூடாது.
இந்தக் காரியத்தில் அரசு பாதிக்கப்பட்ட மக்களின் மன உணர்வோடு கூட நிற்க வேண்டும். தனிப்பட்ட சில மனிதர்களின் தவறு ஒரு அரசாங்கத்தின் தவறல்ல. அது அரசோ, காவல்துறை சார்ந்த உயரதிகாரிகளோ எடுத்த முடிவல்ல என்பதை மக்கள் உணர்ந்துகொள்ளும் வகையில் அரசின் நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையாக அமைய வேண்டும்.
அதுவே வரும் காலங்களில் மக்களின் மனதில் நல்லதொரு பிம்பத்தை இந்த ஆட்சிக்கு ஏற்படுத்தித் தரும். குற்றம் செய்தவர்களை பாரபட்சமின்றி இந்த அரசு கையாள வேண்டும் என்பதை ஒரு மூத்த குடிமகனாக, மக்களை நேசிக்கும் படைப்புகளைத் தந்த ஒரு படைப்பாளியாகக் கேட்கிறேன். செய்தவன் தவறுக்கான பொறுப்பை ஏற்கட்டும். நீதி அதற்கான வேலையை செய்யட்டும். இதை இந்த அரசு அழுத்தமில்லாமல் அனுமதிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.
காவல் இலாக்கா மட்டுமல்ல உங்கள் வசம். தனித்தனியாக இத்தமிழக மக்கள் உங்கள் பொறுப்பில்தானே உள்ளார்கள்?? வேலைப்பளு, மன அழுத்தம், மனச்சுமை காரணமாக அப்பாவி பிள்ளைகளின் உயிரை எடுத்துவிட்டார்கள் என்று பதிலிறுப்பது எந்தவிதத்திலும் ஈடாகாத பரிவற்ற குரலாகவே பார்க்கிறேன்.
கரோனா காலத்தில் மருத்துவர்களுக்கு இல்லாத பணிச்சுமையா? தூய்மைப் பணியாளருக்கு இல்லாத மன அழுத்தமா? பொருளாதாரம் இழந்து வருமானம் இல்லாமல் இருக்கும் மக்களுக்கு இல்லாத நெருக்கடியா? இப்படி மன அழுத்தத்தில் அனைவரும் தவறான முடிவு எடுத்தால் என்ன ஆவது??
எனவே தமிழக அரசு, தமிழகத்தில் வேலைப்பளுவால், பொதுமக்களை வதைபிணமாக்கும் மனம் அழுத்தம் யாரேனும் கொண்டிருந்தால் அக்காவலர்கள் அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதியுங்கள். விடுப்பில் சென்று மன அமைதி கொள்ளட்டும்.
நேரடியாக அரசின் கீழ் பணிபுரிபவர்கள் கவனமற்று தன்னிலை இழந்து செயல்படுவது எத்தனை அவப்பெயரை உலக அளவில் அலைகளாக்கி விடுகிறது என்பதை ஒவ்வொரு அரசுப் பணியாளர்களும் கவனத்தில் கொள்ள வலியுறுத்த வேண்டும்.
மக்களாகிய நாங்கள் எங்கள் உயிர் காத்து நிற்கும் காவலர்களுக்கு நன்றிக் கடன் கொண்டுள்ள இந்நேரத்தில் இப்பெருங்குற்றம் மற்ற கடமையாளர்களின் பெரும்பணியை மறக்கடிக்கச் செய்கிறது என்பது என்னைப் பொருத்தவரை விசனமே!
அகால மரணமடைந்த ஜெயராஜனுக்கும் பென்னிக்ஸுக்கும் மட்டுமல்ல இந்த பேரிடரைப் பார்த்துப் பார்த்துக் கையாளும் அரசுக்கும் பெரும் அநீதி இழைத்துள்ளார்கள் சாத்தான்குள காவல் அதிகாரிகள் என்பதை முதல்வர் மனதாரப் புரிந்துகொள்ள வேண்டும்.
இக்குற்றத்தின் போது உடனிருந்த காவலர் ரேவதி மனசாட்சியின்படி நடந்துகொண்டதைப் பார்க்கும்போதும், சில காவல் துறை உயரதிகாரிகளே கண்டித்திருப்பதும் மன ஆறுதலைத் தருகிறது. அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். காவலர் ரேவதியின் பாதுகாப்பை இவ்வரசு உறுதிசெய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கோள்கிறேன்.
இச்சம்பவத்தில் தானாக முன் வந்து வழக்கை எடுத்துக் கொண்ட மதுரை உயர் நீதி மன்றத்திற்கும், நீதியரசர்களுக்கும் நன்றிகள். இரவு பகல் பார்க்காமல், கரோனாவின் தாக்கம் கண்டு தனியறைக்குள் புகுந்துகொள்ளாமல் முகக்கவசத்தை அணிந்துகொண்டு களப்பணியாற்றும் உங்கள் ஒட்டுமொத்த நற்பெயரை ஒரே சம்பவத்தில் சிதைத்த அக்கொடூரர்களை மேலும் மக்கள் பணி செய்யவிடாமல் தடுப்பதே பாதிக்கப்பட்ட உங்களுக்கும் அவ்வப்பாவிக்
குடும்பத்திற்கும் ஈடுகட்டப்பட்ட நீதியாகப் பார்க்கப்படும்.
ஆதலின் என் குரலை ஒவ்வொரு தமிழனின் ஆதங்கக் குரலாக எடுத்துக் கொண்டு, துறைரீதியான கடுமையான நடவடிக்கைகளை அக்கொடியோர் மீது மேற்கொள்ள வேண்டும் என தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவையின் சார்பாகவும் ஒட்டுமொத்த திரையுலகின் சார்பாகவும் வலியுறுத்துகிறேன் என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு - த்ரிஷா இணைந்து நடித்திருந்த 'விண்ணைத் தாண்டி வருவாயா' கடந்த 2010 ஆம்ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை கார்த்திக் - ஜெஸ்ஸி என்ற இரண்டு கேரக்டர்களுக்குள் நிகழும் இயல்பான காதலும் அதன் விளைவுகளும் என மிகவும் நேர்த்தியாக திரைக்கதை அமைத்திருப்பார் கௌதம் மேனன்.
இந்த படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் இந்த படம் ரசிகர்களில் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு அந்த படத்தின் தொடர்ச்சியாக கார்த்திக் - ஜெஸ்ஸி பேசிக்கொண்டால் அவர்களது உரையாடல்கள் எப்படி இருக்கும் என்றஅடிப்படையில்
கார்த்தி டயல் செய்த எண் என்ற ஷார்ட் ஃபிலிம் ஒன்றை இயக்கியிருந்தார் கௌதம் மேனன்.
இந்த படத்தில் மீண்டும் கார்த்திக் - ஜெஸ்ஸியாக சிம்பு மற்றும் த்ரிஷாவே நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்த குறும்படம் ஒன்றாகாக எண்டெர்டெயின்மென்ட் யூடியூப் பக்கத்தில் கடந்த 20ம் தேதி புதன்கிழமை வெளியிடப்பட்டது. ரன்வே ரொமான்டிக் திரைப்படமான விண்ணைதத்தாண்டி வருவயா திரைப்படத்தின் மறுதொடக்கமாக இந்த குறும்படம் கொரோனா முழு அடைப்பின் போது படம்பிடிக்கப்பட்டுள்ளது.
12 நிமிட நீளமுள்ள இந்த குறும்படம், அடிப்படையில் கார்த்திக்கும் ஜெஸ்ஸிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலை கொண்டுள்ளது. முழு அடைப்பு மற்றும் திரைப்பட வேலைகளை இடைநிறுத்தம் காரணமாக சோகத்தில் இருக்கும் கார்த்திக், அமெரிக்காவிலிருந்து கேரளாவுக்கு வரும் ஜெஸ்ஸியை தொலைபேசியில் அழைத்து பேசுவது தான் குறும்படத்தின் குறுகிய கதை. இந்த ஷார்ட் ஃபிலிம் கடந்த 20ம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
கௌதம் மேனனின் படங்களில் பொதுவாக காணப்படும் எளிய உரையாடல்கள். நீண்ட, முதிர்ந்த, சுத்திகரிக்கப்பட்ட ஆழ்மனது உரையாடல் அவரது இந்த குறும்படத்திலும் இடம்பெற்றுள்ளது.
தொலைபேசி வாயிலாக நிகழும் உரையாடலாக இந்தக் குறும்படம் அமைந்திருந்தது. இதில் இடம்பெற்றுள்ள வசனங்களை வைத்து ஒரு விவாதமே சமூக வலைதளத்தில் நடந்து கொண்டிருக்கிறது. மேலும், பலரும் மீம்ஸ்களும் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த விமர்சனங்கள் குறித்து இயக்குநர் கெளதம் மேனன் ,
"இந்தப் படம் எடுத்தது, நீங்களும் உங்கள் முன்னாள் காதலியை அழைத்துப் பேசுங்கள் என்று சொல்வதற்காக அல்ல. இது ஜெஸ்ஸி - கார்த்திக்கின் கதை. அவ்வளவுதான்", என்று கூறியிருக்கிறார்
அதேவேளையில் கொரோனா அடைப்பிற்கு பின்வவரும் திரைப்படத் துறையின் நிச்சயமற்ற எதிர்காலம், எழுத்தாளரின் தடுப்பு மற்றும் ஒரு திரைப்படத் தயாரிப்பாளரின் பாதுகாப்பின்மை பற்றிய ஆழ்மனது உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
நிகழ்கால நிலைமையினை பார்வையாளர்கள் மனதில் பதியவைக்கும் வகையில் lock down, corona virus, quarantine, self-isolation போன்ற வார்த்தைகளும் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளன.இத்திரைப்படத்தை ஐசரி கணேஷ்
மற்றும் ஒன்றாகா எண்டர்டெயின்மென்ட் வழங்க கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கியுள்ளார். திரிஷா மற்றும் சிம்பு மீண்டும் தங்கள் பாத்திரத்தை கையில் எடுத்துள்ளனர். படக்காட்சிகள் முழுவதும் iPhone உதவியால் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.